அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலை: சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலைக்குள் உயிரிழப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தனகல்ல இலக்கம் 02 நீதிமன்றில், அறிக்கையொன்றை சமர்பித்து, இந்த விடயத்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
சந்தேகநபர் மஹர சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளமைக்கான வெலிசர நீதவான் அறிக்கை மற்றும் சிறைச்சாலை அறிக்கை ஆகியவற்றை, சிறைச்சாலை அதிகாரி, அத்தனகல்ல நீதிமன்றில் சமர்பித்திருந்தார்.
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அன்டன் கேப்ரியல் என்ற சந்தேகநபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம் காரணமாக குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரி, நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மன்று பிறப்பித்த உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரின் கொலை சம்பவம் தொடர்பில் 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 4 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 36 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.