நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய தயார்: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு(Video)
நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கும் இந்த காலகட்டத்தில் சர்வ கட்சியின் தேவையை நாங்கள் புரிந்து கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“சர்வகட்சி அரசாங்கம் உருவாகும் எனில் நாங்கள் நாட்டு மக்களின் நன்மை கருதியும் நாட்டின் சூழ்நிலை கருதியும் சில நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய தயாராக உள்ளோம்.
ஆனால் கடந்த காலங்களில் ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுகளில் அவர்களை ஏமாற்றியுள்ளனர்.இதனை நல்ல அனுபவமாக கொண்டு,யாரிற்கும் நாங்கள் எழுந்தமானமாக ஏமாற்றுத்தனமாக ஆதரவு தருவதற்கு தயாராக இல்லை”என கூறியுள்ளார்.
"காணாமல்போன தமது உறவுகளுக்காக 2000 நாட்களைக் கடந்து அவர்களின் உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த மக்களும் இனணந்து இந்த 2000 ஆவது நாளைப் போராட்டத்தினூடாக வெளிக்காட்டுகின்றனர்.
நாம் இங்கு பதாகைளுடன் எழுந்தவுடன் ஒளிப்பதிவு நிறுத்தப்படுகின்றது. நாங்கள் பதாகைகளைப் பிடித்தால் திட்டமிட்டு நீங்கள் உடனடியாக இது புலிகளுக்கான அஞ்சலி எனப் பிரசாரம் செய்கின்றீர்கள்.
சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவது மட்டுமன்றி அவர்களின் பிரதிநிதிகள் கூட நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் தமது பேச்சுச் சுதந்திரத்திலிருந்து - கருத்து சுதந்திரத்திலிருந்து மறுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்படுகின்றார்கள்.
இதற்கும் எமக்கு நீதி வேண்டும். தமது காணாமல்போன் உறவுகளுக்காக 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அந்த மக்கள் வீதிகளில் தொடங்கிய போராட்டமானது இன்று 2000 நாட்களைக் கடந்து 121 பெற்றோர்களை, உறவுகளை இழந்து முன்னெடுக்கப்படுகின்றது. அந்தப் போராட்டத்த்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் இந்தச் சபையில் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றோம்.
உயிரிழந்த 121 பேரும் போராட்டக்களத்தில் இருந்தவர்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரணித்துள்ளனர். இந்த மரணங்களைச் சாதாரணமாக விட்டுவிட முடியாது.
இந்த மரணங்களும் இந்த அரசினுடைய படுகொலைப் பட்டியலில் வரவேண்டிய
விடயம். 121 உறவுகளும் மரணிக்கவில்லை. கொல்லப்பட்டார்கள். அவர்களை வீதிகளில்
இறங்கிப் போராட வைத்து இந்த அரசு கொன்றுள்ளது. இதற்கு அரசு பதில் சொல்லித்தான்
ஆக வேண்டும்" - என்றார்.