மன்னாரில் மின் தகன நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு - நகரசபையின் முதல்வர்
மன்னார் மாவட்டத்திற்கென மின் தகன நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மின் தகன நிலையம் அமைப்பதற்காக மன்னார் நகர சபையால் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் அவர் மேலும் ஊடகங்களுக்கு கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடலங்கள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டு வந்தது.
எனினும் இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் ஒன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைவாக மன்னார் மாவட்டச் செயலாளர் தலைமையில் அண்மையில் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதோடு, மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக நிதி உதவி கோரப்பட்டது.
அதற்கமைவாக நேற்றைய தினம் மன்னார் நகரசபையில் விசேட கூட்டம் கூட்டப்பட்டுக் கலந்துரையாடப்பட்டு மன்னாரில் அமைக்கப்படவுள்ள மின் தகன நிலையத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது எனச் சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மன்னாரில் தற்போதைய கோவிட் தொற்று காரணமாகப் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு மன்னார் நகர சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் 50 லட்சம் ரூபாய் நிதி மன்னாரில் மின் தகன நிலையம் அமைக்க ஒதுக்கியுள்ளோம்.
மேலும் பொது அஞ்சலி மண்டபம், சடலம் எரியூட்டும் இடத்திற்கு அருகாமையில் கிரியைகளைச் செய்வதற்குத் தேவையான மண்டபம் மற்றும் மலசலக் கூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த வேலைத்திட்டங்கள் சில நாட்களில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் அமைக்க 30 மில்லியன் ரூபாய் நிதி தேவை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நகரசபை குறித்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
