அநுர அரசில் அதிகரிக்கும் ஊழல் அதிகாரிகள் : இலங்கை போக்குவரத்து சபை தலைவர் மீதான குற்றச்சாட்டு..!
இலங்கை போக்குவரத்துச்சபையின் தலைவருக்கு எதிராக எழுந்துள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து, சுயதொழில் செய்பவர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்லஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான கண்டனம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணிகளின் போது, தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தி அதன் மூலம் போக்குவரத்துச் சபை தலைவர் பெருமளவு இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன், பேருந்து நிலையத்திலுள்ள தற்போதைய கடைகளை அகற்றிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்க அவர் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்.

பேருந்து நிலைய உணவகத்தின் நீர் மற்றும் மின்சார விநியோகத்தை அநியாயமாகத் துண்டித்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட சிவில் வழக்கில், போக்குவரத்துச் சபைத் தலைவரும் நிறைவேற்று அதிகாரியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளது.
அரசின் கொள்கைகளுக்கு மாறாகச் செயற்படும் இவ்வாறான ஊழல் அதிகாரிகளின் விவரங்களை நாங்கள் சும்மா விடமாட்டோம் என தெரிவித்த பிரதீப் சார்லஸ், இவரின் அனைத்து முறைகேடுகளையும் ஆதாரங்களுடன் 'பெலவத்தை'யின் (ஜே.வி.பி. தலைமையகம்) கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாகக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகங்கள் மூலம் சிறு வணிகர்களைப் பாதிக்கும் வகையில் செயற்படும் இத்தகைய உயர் அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.