கடந்த கால அரசாங்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகள்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கடந்த கால அரசாங்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகளால் கூட்டுறவு துறையானது சற்று சரிவடைந்து உள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவாளரூமான வீரசிங்கத்தின் 61வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் தலைமமை உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்பட்டு மக்களுக்கு நிவாரண விநியோகங்களை மேற்கொண்டது. தனியாரோடு போட்டி போடுகின்ற அளவிற்கான நிலைமையில் கூட்டுறவு இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த கால அரசாங்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் கூட்டுறவு துறையில் சற்று வீழ்ச்சி இருக்கின்றது.
தற்போது வழங்கப்படுகின்ற அசுவசும கொடுப்பனவு போன்ற கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட கொடுப்பினைகள் கூட்டுறவு சங்கங்கள் ஊடாகவே விநியோகிக்கப்பட்டன. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு அமைச்சரின் பிரதேசத்தில் தரம் குறைந்த நிவாரண பொருட்களை கொடுத்ததாக தெரிவித்து கர்ப்பிணித் தாய்மார்கள் நிவாரணம் தனியார் ஊடாக வழங்கப்படுகின்றது.
நிவாரணம்
இன்று ஏறத்தாழ 10 வருடங்களாக இவ்வாறு தனியார் ஊடாக அந்த நிவாரணம் வழங்கப்படுகின்றது. அந்த நிவாரணம் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டால் ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களுக்கும் இரண்டரை இலட்சத்துக்கு மேல் இலாபம் வரும்.

இதனை நான் ஏன் இந்த இடத்தில் கூறுகின்றேன் என்றால், கூட்டுறவு பணியாளர்கள், கூட்டுறவு துறையின் பணிப்பாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் ஆகியன எமது நியாயமான கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் முன்வைத்து எமக்கான செயற்பாடுகளை நாமே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவே நான் கூறுகின்றேன்.
கர்ப்பிணித் தாய்மாருக்கான நிவாரணத்தால் மட்டும் இந்த 10 ஆண்டுகளிலும் இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாவுக்கு அதிகமான ஒரு தெகையை இந்தக் கூட்டுறவுத்துறை இழந்திருக்கின்றது. ஒரு பொருளுக்கான ஏகபோக உரிமையை நாங்கள் பெறுவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு நாங்கள் குரல் கொடுப்போமாக இருந்தால் எமது பிரதேசத்தில் இருக்கின்ற இளைஞர் - யுதிகள் பலர் கூட்டமைப்பு துறைக்குள் உள்வாங்கப்பட்டு வேலை செய்யக்கூடிய நிலை ஏற்படும்.
அத்துடன் தனியாரின் விலை சுரண்டல்களில் இருந்து நாங்கள் மக்களை பாதுகாக்க முடியும். ஒரு பொருளுக்கான ஏகபோக உரிமை கிடைப்பதன் மூலம் நாங்கள் கொழும்பிலிருந்து அந்த பொருளை கொள்வனவினை செய்து மக்களுக்கு வினியோகித்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். இந்த விடயத்தை நாங்கள் அனைவரும் ஒரு குறிக்கோளாக எடுத்து செயல்பட வேண்டும் என்றார்.