கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி - இரணைமடு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் கிளிநொச்சி குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு வேலைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பாரிய அளவில் கிடைக்கப்படாத நிலையில் குறிப்பிட்ட சில வேலைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் நீர்ப்பாசன கட்டுமானங்களுக்கான பாரிய அளவில் அபிவிருத்தி நிதிகள் கிடைக்கப்பெறாத நிலையில் பராமரிப்பு வேலைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாராமரிப்பு வேலைகள்
இவ்வாறன பாராமரிப்பு வேலைகள் உரியவாறு இணங்காணப்படாது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி குளத்தின் வான் பகுதியில் ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு பல மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டு அதற்கான பாலம் அமைக்கப்பட்டதுடன் வான் பகுதியில் மண்ணரிப்பு ஏற்படாதவாறு கொங்கிறீட் இடப்பட்டதுடன் இதற்கு சமாந்தரமாக ஏற்கனவே இருந்த கொங்கிறீட் வீதி என்பனவும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் தற்போது நீர்பாசன பராமரிப்பு வேலை திட்டத்தின் கீழ் பெருந்தொகை நிதியில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கணேசபுரம், குஞ்சு பரந்தன், பெரியபரந்தன், பன்னங்கண்டி ஊரியான் போன்ற பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நீர்ப்பாசன பராமரிப்பு வேலைகள் உள்ள போதும் அவற்றை மேற்கொள்ளாது.
பெருந்தொகை நிதி செலவீடு
கிளிநொச்சி குளத்தின் கீழ் பகுதியில் ஏற்கனவே பெருந்தொகை நிதி செலவிட்டு அபிவிருத்திகளை செய்துவிட்டு அதே பகுதியில் இவ்வாறான வேலைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் விவசாயிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது இது தொடர்பான
விபரங்களை இரணைமடு நீர்பாசன பொறியாளலாளரிடம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்த நிலையில் இரணை மடு நீர்ப்பாசன பொறியியலாளரை பல தடவைகள் தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



