உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் மீது ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் அதிகாரபூர்வ வாகனங்கள் உள்ளிட்ட வளங்களை தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் தேர்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்து அவர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் இவ்வாறு சபைக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளிட்ட வளங்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தேர்தல் சட்ட மீறல்கள்
இவ்வாறு வளங்களை பயன்படுத்துவது தேர்தல் சட்ட மீறல் என்பதுடன், ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே உள்ளூராட்சி மன்றத்தின் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை உடன் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.