சகல பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு
இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளும் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
கடந்த 9ஆம் திகதி முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கான சுகாதார வழிகாட்டியானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
அந்த சுகாதார வழிகாட்டியின் அடிப்படையிலேயே இன்றும் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும்.
பாடசாலைகளின் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் குறித்த பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்றைய தினம் கல்வி
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் சுகாதார நடைமுறைகளைப்பேணியவாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப்பேணியவாறு வருகைதந்ததைக் காணமுடிந்தது.
பாடசாலைகளில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் கல்வி நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.