20 பேர் அரசாங்கத்தில் இணைய போகிறோம்:எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்த கட்சியின் செயலாளர்
தான் உட்பட சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள்
அரசாங்கத்தில் இணையும் இந்த குழுவில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மாத்திரமின்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அடங்குவதாக பேசப்படுகிறது.
சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது பல கட்சி அரசாங்கம் அடுத்த சில தினங்களில் அமைக்கப்படவுள்ளதுடன் அதில் இவர்களுக்கான அமைச்சு பதவிகள் பகிரப்படும் என தெரியவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்தால், அந்த கட்சி நாடாளுமன்றத்தில் சிறிய கட்சியாக மாறும் என்பதுடன் தற்போது சஜித் பிரேமதாச வகித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எதிர்க்கட்சியில் பெரும்பான்மை பிரதிநிதிகளை கொண்டிருக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கு கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.