ஆசியாவில் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடாக இலங்கை! சிறைச்சாலைகளில் உள்ள சிக்கல்நிலை - அஜித் பி பெரேரா தகவல்
இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும் விரைவுபடுத்தப்பட மாட்டாது எனவும், ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைகள்
அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் நீதித்துறையில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்திருப்பதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ அல்லது நீதிமன்ற அமைப்புக் சட்டத்திலோ வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தக்கூடிய எந்தவொரு திருத்தமும் செய்யப்படவில்லை.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதால் வழக்குகள் விரைவாக முடியப் போவதில்லை. உயர்நீதிமன்றத்தில் பதவி வெற்றிடங்கள் இருந்தபோதிலும், அனுபவமிக்க மேன்முறையீட்டு நீதிமன்றச் சிரேஷ்ட நீதியரசர்களுக்கு உயர்நீதிமன்ற நியமனங்கள் வழங்கப்படாமல் அவர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புத் துறையின் திறனை மேம்படுத்துவதற்கோ குற்றத் தடுப்புக்கோ அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசியாவிலேயே பாதுகாப்புத் தரப்பிடம் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடுகளாக இலங்கையும் ஆப்கானிஸ்தானும் மட்டுமே உள்ளன.

சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு நடவடிக்கைகள்
பாதுகாப்புத் துறையிலுள்ள ஆயிரக்கணக்கான பதவி வெற்றிடங்களை நிரப்பவும், அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்தவும் அரசாங்கம் தவறிவிட்டதுடன், சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு நடவடிக்கைகள் இல்லாததால் தண்டனை முடிந்து வருபவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் சூழலே நிலவுகின்றது.
எளியவர்களாகக் காட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரச பிரதானிகளின் மாளிகைகள் மற்றும் பெரும் சொத்து விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அந்தத் தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தவே புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாக்குறுதியளித்தபடி அந்தச் சட்ட மூலத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல் அப்படியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊழலைத் தடுப்பதற்குப் பதிலாக ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் இந்தச் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக எதிர்க்கின்றது என்றார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening