வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்குவதை இலக்காக வைத்து செயற்படும் தொல்லியல் திணைக்களம்! - மாவை
வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்படுகின்றதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமிருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இன்றையதினம் ஆலய நிர்வாகத்தினருக்கும், தமிழ் அரசியல் தரப்புக்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் ஆலயத்தின் தொன்மைகள் தொடர்பாகவும் வரலாறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போது மாவை சேனாதிராஜா குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அனைத்து விடயங்களிலும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர் பௌத்த பிக்குகள் சிலர் இங்கு வந்து சென்றுள்ளதுடன், வருகின்ற 23ஆம் திகதி அகழ்வுகளில் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த ஆட்சி, எங்களுடைய நிலங்கள் பாரம்பரியங்கள் இருக்கின்ற தெய்வ சந்நிதிகளிலே தங்களது பௌத்த சமயத்தினை நிலைநாட்டுவதற்காக தொல்லியல் திணைக்களம் என்னும் குழுவினை உருவாக்கிக் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்களது பௌத்த அடையாளங்கள் இருப்பதாகக் கூறி பௌத்த ஆலயங்களை நிலைநாட்டுவதாகவும் பரம்பெருக்களாக நாங்கள் ஆண்டு இருக்கின்றோம் என்பதை நிருபிப்பதற்காக தங்களது விருப்பப்படி தனியே பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட குழுவை நியமித்து உள்ளனர்.
பல ஆயிர வருடங்களாக இருக்கும் இந்த ஆலயத்தினை ஆராய்ச்சி செய்து பார்க்க இவர்கள் நிற்கின்றார்கள். இந்த இடத்தினை இராணுவத்தினர் பல வருடங்களாக ஆளுகைக்குள் வைத்திருந்தனர். அவர்களே இவ் ஆய்வினை செய்யப் பௌத்த குருமாருடன் ஆர்வமாக உள்ளனர்.
இவற்றை தடுப்பதற்கு நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து தடை உத்தரவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் எங்களுடைய பிரதேசங்களை மற்றும் எங்களுடைய தெய்வங்கள் இருக்கின்ற இடங்களைப் பௌத்த ஆலயங்களாக அடையாளங்களாக உருவாக்கி அதனை நிரூபித்து இந்த பிரதேசம் தங்களுடையதென்றும் இந்த பூமி எங்களுடையது அல்ல தம்முடையது என வரலாற்று ஆவணங்களைத் தயாரிப்பதற்கு முயல்கின்றார்கள்.
இதற்கு நாங்கள் இடம் கொடுக்காது எமது மண்ணை நாங்கள் காப்பாற்ற சட்ட நடவடிக்கை மற்றும் போராட்டங்களை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
