வடமாகாணத்தில் மழைவீழ்ச்சி அதிகரிப்பால் சிறுபோகச் செய்கை 81.5% ஆக உயர்வு
வடமாகாணத்தில் 2026ஆம் ஆண்டு சிறுபோக செய்கையாக 53, 084 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 1, 632 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.
தற்போதைய வடமாகாணத்தின் குளங்களின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 53 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், 2026ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கை 53 குளங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 53,084 ஏக்கரில் நெல் செய்கையும் 1,632 ஏக்கரில் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையும் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக கிடைத்த மழைவீழ்ச்சியால், கடந்த ஆண்டு 74 சதவீதமாக காணப்பட்ட பயிர்ச்செய்கை தற்போது 81.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், சுமார் 12 குளங்களை அண்டியுள்ள பகுதிகளில் 100 வீதம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரணைமடுக்குளத்தின் கீழ் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் செய்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.