கிளிநொச்சியில் வனப்பகுதிகளாக அடையாளமிடப்பட்டுள்ள விவசாயக்காணிகள்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பகுதிகள் மற்றும் குளத்தின் கீழ் நீண்ட காலமாக பயிர் செய்கை மேற்கொண்டு வந்த விவசாய காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளமானது நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள நடுத்தர குளங்களில் ஒன்றாக காணப்படுவதுடன்,602 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பெரும் போகம் மற்றும் சிறுபோக பயிர் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முதல் வனவளத் திணைக்களத்தினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தின் நீரேந்து பிரதேசங்கள் மற்றும் குளத்தின் கீழான பொதுமக்களின் வயல் காணிகள் குளத்தின் வான் பகுதி என்பன வனப்பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளன.