வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு: அரசாங்க அதிபர் உறுதி (Photos)
மிக நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வரும் வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அரசாங்க அதிபர் எஸ். டக்ளஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (29) அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
விவசாயிகளின் பிரச்சினை
வட்டமடு விவசாயிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைகளை ஆழமாக முன்வைத்ததுடன் அதற்கான தீர்வை அவசரமாக எடுக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
சமகாலத்தில் உள்ள நெருக்கடி நிலையில் விவசாயிகள் படும் கஷ்டநிலை, உரப்பிரச்சினைகள் உட்பட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
துரிதகதியில் தீர்வு
வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைப்பெற வேண்டும் என்பதில் தான் உடன்பாட்டுடன் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி துரிதகதியில் எடுப்பதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
அத்துடன் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்ட இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ பாவா, நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ.ஜீ. எம். அன்வர் நௌசாத் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.



