கோணேஸ்வர ஆலய ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டனம் நிறைவேற்றப்படல் (Photos)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே உடனே அதனைத் தடுத்து நிறுத்தி பல்வேறு இடங்களில் கண்டன பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய, பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் அமர்வு நேற்று (25.10.2022) தவிசாளர் சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இதன்போது ஈழ வள நாட்டில் கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திருகோணமையில் அமைந்துள்ள திருககோணேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. இந்நிலையில் அந்த ஆலயத்தில் தொல்பொருள் என்ற போர்வையில் கோயில் புனருத்தாரண கட்டுமானப்பணிகள் திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
அங்கு சிங்கள ஆக்கிரமிப்புக் கடைகளால் ஆலயத்தின் புனிதத்தன்மை தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றன.
இவைகளையெல்லாம் இந்த அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக அனைத்தையும் மூடிமறைத்து, இந்து மதத்தையும் மக்களையும் வரலாற்றையும் மூடி மறைக்க அரசாங்கம் முயல்கின்றது. தமிழர்களை ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடு கிழக்கில் மாத்திரமின்றி வடக்கிலும் நடந்தேறி வருகின்றன.
எனவே கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் இச்சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றுகின்றோம்.
இந்த தீர்மானத்தை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். சபை உறுப்பினர்கள் அனைவரும் தாம் ஏகமனதாக இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.
மேற்படி தீர்மானத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கும் பிரதமர் கவனத்திற்கும் அனுப்ப வேண்டும் எனவும் சபையில் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பிரதேச சபை
திருகோணமலை - திருகோணேஸ்வரம் ஆலயத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபையில் முதல் தடவையாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தலைமையில் நேற்று (25.10.2022) கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்திலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மிக தொன்மையான ஆலயமாக திருகோணமையில் அமைந்துள்ள தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வர ஆலயம் திகழ்கின்றது.
இந்நிலையில் அவ்வாலயம் தொல்பொருள் என்ற போர்வையில் ஆலயத்தின் கட்டுமாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு சிங்கள ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் கடைகளால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுகின்றன.
இலங்கையின் மிக தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருகோணமலை திருக்கோணேஷ்வரர் ஆலயம் சைவத்தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று நிலமாகும்.
இந்த ஆலயம் சூழ்ந்த இடங்களில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்கப்பட்டும், தொல்லியல் திணைக்களத்தினால் சில தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்க பட்டுவருவதும் ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை வேதனை அடையவைத்திருக்கின்றது.
சட்டவிரோத கடைகள் முற்றாக அகற்ற உடன் நடவடிக்கை
திருக்கோணேசர் கோயிலில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட சட்டவிரோத கடைகள் முற்றாக அகற்ற உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசின் திட்மிட்ட இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் என சபையில் திரு. எஸ். பஞ்சலிங்கம் பிரேரணையை முன் வைத்தார்.
அவரின் இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக ஏற்றுக்கொண்டதுடன், இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டது.
தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி ,பிரதம மந்திரி தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை நகர சபையில் தமிழ் பேசும் இந்துக்கள் அதிக அளவில் இருந்த போதும் இவ்வாறான ஒரு பிரேரணையை கொண்டு வராமல் இருந்தது மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
கிண்ணியா பிரதேச சபையில் திருகோணமலை கோனேஸ்வரா ஆலயம் தொடர்பில் பிரேரணை கொண்டுவரப்பட்டமை இன ஒற்றுமையை வலுவூட்டும் செயல் எனவும் புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.
செய்தி: பதுர்தீன் சியானா
காரைதீவு பிரதேசசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டது திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உடனே அதனைத் தடுத்து நிறுத்த கண்டன பிரேரணையொன்று நேற்று (25.10.2022) காரைதீவு பிரதேசசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டது.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களால் கொண்டுவரப்பட்ட இப்பிரேரணையானது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது. இதன் போது தவிசாளர் ஜெயசிறில் அவர்களால் இந்த தீர்மானம் பிரேரணையாக முன்மொழியப்பட்டது.
இது தொடர்பில் அவர் தனது முன்மொழிவில் தெரிவிக்கையில்,
இலங்கையின் மிக தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் சைவத்தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று நிலம்.
அந்த ஆலயம் சூழ்ந்த இடங்களில் சட்டவிரோதமாகக் கடைகள் அமைக்கப்பட்டும், தொல்லியல் திணைக்களத்தினால் சில தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருவது ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை வேதனை அடைய வைத்திருக்கின்றது.
தொல்பொருள் திணைக்களம் ஒரு ஆலய விடயத்திற்குள் தலையிடுகின்றது என்றால், நிச்சயம் அங்கு ஒரு இரகசிய வேலைத்திட்டமிருக்கும்.
இந்த பின்புலத்தை நோக்கினால், திருகோணேஸ்வர ஆலயத்தை உள்ளடக்கியவாறு, உல்லாசத்துறை அபிவிருத்தியென்னும் பெயரில் தொல்பொருள் திணைக்களம் நுழைவதானது, நீண்டகால அடிப்படையில் கோணேசர் ஆலயத்தை விழுங்கும் ஒரு செயற்பாடுதான்.
ஏனெனில் உல்லாசத்துறை அபிவிருத்தியை செய்வதற்கு பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது, குறிப்பாக கோணேசர் ஆலயப்பகுதியை தெரிவுசெய்ய வேண்டிய அவசியமென்ன எனவே அங்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும்.
கோணேசர் கோயிலில் திட்டமிட்டு நிறுவப்படும் பௌத்த மயமாக்கல் சிங்கள குடியேற்றங்கள் என்பனவற்றை தடுத்து ஆலய வளாகத்தை சூழ உள்ள பிரதேசங்களை புனித பிரதேசமாக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சபையில் ஏகமதாக நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தவிசாளர் இதன் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: நவோஜ்





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
