பணத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினாரா அஷ்ரஃப் கனி? அவரே கூறியுள்ள விடயம்
சூழ்நிலை இரத்தக்களறியாக மாறுவதைத் தவிர்ப்பதற்காகவே தான் காபூலை விட்டு வெளியேறியதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அஷ்ரஃப் கனி ஒரு உலங்குவானூர்தி முழுவதும் பணத்துடன் வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் உலங்குவானூர்தி நிறைய பணத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவில்லை. எனது விருப்பத்திற்கு மாறாகவே நாட்டை விட்டு நான் வெளியேற்றப்பட்டேன்.
அத்துடன், சூழ்நிலை இரத்தக்களறியாக மாறுவதைத் தவிர்ப்பதற்காகவே நான் காபூலில் இருந்து வெளியேறினேன். தற்போது மனிதநேய அடிப்படையில் எனக்கு துபாய் அடைக்கலம் கொடுத்திருக்கிறது.
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே குறித்த செய்திகள் பரப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
