வெடிக்காத குண்டுகளுக்கு இரையான 700 ஆப்கான் சிறுவர்கள்: யுனிசெப் அமைப்பு தகவல்!
ஆப்கானிஸ்தான் போரில் வெடிக்காத குண்டுகளால் 700 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் போரில் வெடிக்காத குண்டுகளால் 700 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்ணி வெடிகள்
இது குறித்து ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் அமைப்பு தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது, 2022ஆம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றை எடுத்து அவர்கள் விளையாடியபோதும், உலோக துண்டுகளை எடுத்து விற்பனைக்காக சேகரிக்கும்போதும் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி காபூல் நகரவாசி ஒருவர் கூறும்போது, வறுமை, வேலையின்மை ஆகியவற்றால் சிறுவர்கள் மலைப் பகுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
சிறுவர்கள் உயிரிழப்பு
அவர்கள் அந்த பகுதியில் கிடைக்கக் கூடிய குச்சிகள் அல்லது நிலக்கரி ஆகியவற்றை உணவுக்காகச் சேகரிக்கின்றனர். ஆனால், அதற்கு முந்தைய ஆண்டுகளில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை. நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் சிறுவர்கள் உட்படப் பலர் சிக்கி உயிரிழந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.