வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனியில் கலப்படம்: பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் முறைப்பாடு(Photos)
வவுனியா - பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனி பையில் ஒரு வகையான இரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமகன் ஒருவர் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா- பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்குப் பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகன் ஒருவர் அவ்வர்த்தக நிலையத்தினால் பொதியிடப்பட்ட சீனி பை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்.
வீட்டிற்குச் சீனியினை எடுத்துச்சென்று அதனைப் பாவனைக்கு உட்படுத்திய சமயத்தில் அதனுள் ஓர் விதமான இரசாயன பொருள் கலந்துள்ளதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த வர்த்தக நிலையம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கிணங்க நாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தினை தொலைபேசியூடாக தொடர்பு
கொண்டு கேட்ட போது,
சீனி பொதியிடும் சமயத்தில் குளிர்பானம் தயார் செய்யப் பயன்படுத்தப்படும்
சிற்றிக்கசிட் தவறுதலாகச் சீனியில் கலந்துள்ளது. தவற்றுக்கு வருந்துவதுடன்
குறித்த சீனியினை பெற்றுக்கொண்டவர்கள் உடனடியாக எம்மிடம் அதனை மீள
வழங்குமாறு வர்த்தகர் தெரிவித்துள்ளார்.








