22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு: மகிந்த யாப்பா
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது நடைபெறும் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (06.10.2022) இதனை தெரிவித்துள்ளார்.
22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்ற அமர்வு
இந்நிலையில் சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
22 ஆவது திருத்தம்
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
22ஆவது திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்குச் சென்ற குழு ஒரு கருத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் மற்றொரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளன.
22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முதன்முதலில் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாற்றான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்குத் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையிலே, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ஜனாதிபதி மேற்கண்டவாறு
அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.