தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித்தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு! சிவநேசதுரை சந்திரகாந்தன்
ஒற்றுமைபற்றி பேசுவார்கள், வடகிழக்கு இணைப்புபற்றி பேசுவார்கள் ஆனால் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் இன்று(9) திறந்துவைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சுமத்திரன் ஐரோப்பா யூனியனையும் அமெரிக்காவையும் திருத்திப்படுத்தவும் அதற்குப் போட்டியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சிவில் அமைப்புக்கள் எனப் பல கூறுகளாகப் பிரிந்து ஜ.நா சபைக்குக் கடிதம் அனுப்புகின்றனர்.
இவ்வாறு பல கூறுகளாகப் பிரிந்து கிடப்பவர்கள் மட்டக்களப்பிற்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள். ஆகையால் யார் முதலில் ஒன்றுபடவேண்டும் என்பதை அவர்கள் சிந்திக்கவேண்டும். மறுபக்கத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை ஒருமித்த குரலிலே ஒன்றாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே உரங்களையும் பதிவு செய்யப்படாத களஞ்சியசாலைகளில் வர்த்தக நோக்கிலே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை அரசாங்கம் பரிசோதித்துக் கைப்பற்றியபோது அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குரல் எழுப்பினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே எத்தனை மூடை நெல் இருக்கின்றது. எத்தனை மூடை அரிசி இருக்கின்றது என்பதைப் பார்க்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. திட்டமிட்ட சதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசியை 120 ரூபாவுக்கு விற்பது என்பது மிக ஒரு அடாத்தான விடயமாகப் பார்க்கின்றோம்.
ஆகவே அரசியல் வாதிகள் என்பதற்காக எல்லா பிழைகளையும் நாங்கள் நியாயப்படுத்த முடியாது. முடிந்தால் மில் உள்ளவர்கள் பதிவு செய்து எங்களிடம் 20 ஆயிரம் 30 ஆயிரம் மூடை இருக்கின்றது எனத் தெரிவித்து நெல்லை குத்தி அரிசியாக்க அரசாங்கம் தடை விதிக்கவில்லை.
மில்லுகளே இல்லாமல் தனிய களஞ்சியசாலைகளை கட்டி நெல்லை களஞ்சியப்படுத்திவிட்டு அதனை அதிகூடிய விலைக்கு விற்கக் காத்திருப்பவர்களைத்தான் நாங்கள் சுற்றி வளைத்தோம். ஆனால் இந்த விடையத்திலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பாமர மக்கள் விலை ஏற்றத்தால் கஷடபடுகின்ற மக்கள் பக்கத்தில் இருக்கவேண்டும்.
மண்மாபியா, மண்பாபியா என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் அடிக்கடி குறிப்பிட்டது காரணமாக மட்டக்களப்பில் தங்கச் சுரங்கம் இருப்பது போல தெற்கில் இருக்கின்ற அனைத்து மண் வர்த்தகரும் இந்த பகுதியில் வந்து வட்டமிடுவதும் இந்து பகுதியில் தூண்டுகின்ற முயற்சியாக இருக்கின்றது.
70, 80 வருடங்களாக நாடாளுமன்றத்திலிருந்து கொண்டு கூக்குரல் இடுபவர்கள் இன்று பிள்ளையனுக்காக நாடாளுமன்றத்தில் அதிகமாக பேசுவதையிட்டு நான் கவலையடைகின்றேன். மக்களுடைய பிரச்சனைகளைப் பேசி மக்களுடைய பிரச்சனைகளில் தீர்வு காணும் விடையத்திலே முயற்சி எடுக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்வதுபோல மக்களுக்காக உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை மட்டக்களப்பில் டெல்டா வேரியன் 88 வீதம் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இளைஞர்கள் பொது இடங்களில் கூடுவது வர்த்தக நிலையங்களில் கூடுவது மற்றும் அநாவசியமாக வீதிகளில் நடமாடுவதைத் தவிர்த்து வீடுகளைவிட்டு வெளியேறாது சுகாதாரத் துறையினரின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சதோச நிறுவனங்களின் தலைவர் ரியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.