7000 பாரிய ஒக்சிஜன் சிலிண்டர்களை வாங்க நடவடிக்கை
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து அதிகளவானோருக்கு ஒக்சிஜன் தேவை அதிகரித்தால் அதனை ஈடு செய்யும் வகையில் அதிக ஒக்சிஜன் சிலிண்டர்களை வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மருத்துவமனைகளில் தற்போது 24,000 மருத்துவ ஒக்ஸிஜன் சிலிண்டர்களும் 4,000 பெரிய சிலிண்டர்களும் உள்ளன. தற்போதைய நிலையில் ஒக்சிஜன் பற்றாக்குறை இல்லை. எனினும் ஒக்ஸிஜனை சேமிக்க போதிய சிலிண்டர்கள் இல்லாமையே பிரச்சினை எனவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் 7,000 பாரிய சிலிண்டர்களை பெற்று ஒக்சிஜனை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் இவற்றில் 400 சிலிண்டர்கள் நாட்டுக்கு எதிர்பார்க்கிறோம் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஒக்சிஜன் 25 தொன்னாக உள்ளது. தேவையேற்படின் அத்தொகை 80 தொன் வரை அதிகரிக்கும் திறன் எங்களிடம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.