வவுனியா - வீரபுரம் கிராம மக்களின் காணிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை: சாள்ஸ் நிர்மலநாதன்
வவுனியா - வீரபுரம் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை அந்த மக்களுக்கே வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் கிராம மக்களுக்கு 1994ம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட விவசாய காணிகள் யுத்த காலத்தில் ஏற்பட்ட இடப் பெயர்வின் காரணமாக மக்கள் பயன்படுத்த முடியாதவாறு இருந்து வந்தது.
மக்களின் காணிகள்
இந்நிலையில், மீண்டும் மீள் குடியேறிய மக்களுக்கு அந்த காணிகளுக்கு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதனால் மக்களின் காணிகள் பல ஏக்கர் மாற்று இனத்தவரினால் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றமை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதன் அடிப்படையில் நீண்ட கால முயற்சியின் பலனாக நேற்றைய தினம் (24) எனது தலைமையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டிருந்தோம்.

இதன் போது நிலைமைகளை அவதானித்ததுடன் பொது அமைப்புக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டோம்.
இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வீரபுரம் மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச அதிபரினால் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.


நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam