சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை: திலீபன் எம்.பி
வவுனியா, நந்திமித்திரிகம கிராமத்தில் கயிறு திரிக்கும் சுய தொழில் முயற்சியாளர்களை மேலும் வலுப்படுத்தி ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் (K. Dileepan) தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் நந்திமித்திரிகம கிராமத்திற்கு விஜயம் செய்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அங்குள்ள மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், குறித்த கிராமத்தில் கயிறு திரிக்கும் சுய தொழில் முயற்சியாளர்களையும் பார்வையிட்டு கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் கிராமிய பொருளாதாரம் மற்றும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் அடிப்படை வசதிகள் முழுமையதாக பூர்த்தி செய்யப்படாத பல வீடுகள் இந்தக் கிராமத்தில் உள்ளன.
அவை குறித்து அடுத்து வரும் காலங்களில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் இங்குள்ள மக்கள் கயிறு திரிக்கும் சுய தொழில் முயற்சியில் ஈடுபடுகின்றமை சிறப்பான விடயம்.
இக் கயிறு திரிக்கும் செயற்பாட்டை நவீன வசதியுடன் கூடியதாக மாற்றுவதற்கு தேவையான இயந்திர சாதனங்களைப் பெற்றுத் தருவதற்கும், அவர்களுக்கு தேவையான பயற்சிகளை வழங்குவதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் பலர் இதில் தொழில் வாய்ப்புக்களையும் பெறக் கூடிய நிலை உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.