கிளிநொச்சியில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை
கிளிநொச்சி பூனகரி பிரதேசத்தில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பூனகரி பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட காணிகளாக காணப்படுவதுடன் அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பூநகரி செம்மண்குன்று அரசபுரம் பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய காணிகளை உரியவர்களிடம் மீள கையளிப்பதற்கான முன்னாயத்த சந்திப்பு அரச புரம் முன்பள்ளி வளாகத்தில் நேற்று(02.07.2024) நடைபெற்றது.
200க்கும் அதிகமான உரிமையாளர்கள்
பூநகரி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் செக்காலை, கருமாரி, ஈநொச்சி, அரச புரம், பளுவில், பத்தினிப் பாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த 200 க்கும் அதிகமான காணிகளின் உரிமையாளர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் உரிமைப் பத்திரங்களை கைவசம் வைத்துள்ளோர், அதற்கு பதிலாக பதிவு ஆவணங்களை வைத்துள்ளோர் மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாதோர் என மூன்று வகையாக அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மீள குடியேற விரும்புவோர் தமது காணி எல்லைகளை குறிப்பிட்டு கிராம சேவகர் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் சந்திப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பை அடுத்து மக்கள் குடியிருந்த காணிகளின் நிலமைகள் பிரதேச செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேரடியாக சென்று பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |