இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிய அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடவடிக்கை: கோப் குழு பரிந்துரை (Photos)
நாடு பொருளாதார நெருக்கடிக்குச் செல்லும்வரை தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்க கோப் குழு பரிந்துரை செய்துள்ளது.
நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (கோப் குழு) பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்துள்ளார்.
பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தீர்மானங்கள் காரணமாக முழு நாடும் இன்று பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், இதனைக் குற்றமாகக் கருதி விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோப் குழுவின் பரிந்துரை
மத்திய வங்கி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கி நேற்று கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தபோதே கோப் குழுவின் தலைவர் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளார்.
இந்த நெருக்கடி நிலை ஏற்படுவதற்குப் பிரதான காரணம் தொடர்பில் வினவப்பட்டபோது, பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2020 மார்ச் – ஏப்ரல் மாதத்தில் கடன் உதவியைப் பெறச் சென்றபோது, இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் இல்லை என்பது அவர்களினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதாயின் கடன் மறுசீரமைப்புக்குச் செல்லவேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநருக்கு நாணய சபை எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய நிதிச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கலந்துரையாடல்களின் பின்னர் மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஊடாக நிதி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்குக் குறித்த தொழில்நுட்ப பரிந்துரையை அனுப்பியிருந்ததாகவும், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சரவையின் ஊடாகவே அது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி சில்வாவின் கருத்து
அப்போதிருந்த நிதி அமைச்சர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்தைத் தெரிவித்திருக்கவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அஜித் நிவாட் கப்ரால் இதன் உண்மையான நிலையைத் தெரிவித்திருக்கவில்லையென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி சில்வா இங்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2019 நவம்பர் சர்வதேச நாணய நிதிய அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் காணப்பட்டதாகவும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சில மாதங்கள் கழித்து வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறானது அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
வரி வருமானம் குறைக்கப்படக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியிருந்த நிலையில் அப்போதிருந்த ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டின் ஊடாக 600 பில்லியன் ரூபா வரியைக் குறைப்பதற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர இங்கு சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஜகத் புஷ்ப குமார, கலாநிதி சரத் வீரசேகர, மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்த, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.