நடுக்கடலில் பரபரப்பு: வசமாக சிக்கிய காரைக்கால் கடற்றொழிலாளர்கள்
தனுஷ்கோடி கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்கள், ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் மீண்டும் சுற்றிவளைக்கப்பட்டு, ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று(10.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
இதன்போது, விசைப் படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த ரோஷன், சுகாசனம், சாத்தையா, வீரமணி, பவன் உள்ளிட்ட 10 கடற்றொழிலாளர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுற்றிவளைப்பட்டவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் தெரியவருவதாவது, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட கடற்றொழிலாளர்கள் வாரத்தில் மூன்று நாட்கள், நாட்டு படகுகள் நான்கு நாட்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி விசைப் படகுகள் கடலில் 10–15 நாட்கள் தங்கி மீன்பிடியில் ஈடுபட்டதால், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய தீர்மானம்
மேலும், காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதால், இலங்கை கடற்றொழிலாளர்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டு, தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக, இலங்கை கடற்படையின் ஊடாக தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் பாக் ஜலசந்தி மற்றும் தனுஷ்கோடி கடற்பரப்பில் மீன் பிடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட மீனவர்கள் தங்கச்சிமடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பாக் ஜலசந்தி கடற்பரப்பில் தங்கி, காரைக்கால் மீன்பிடி விசைப் படகுகளை கடலில் வைத்து சிறை பிடிப்பதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, மீனவ சங்க பிரதிநிதிகள் காரைக்கால் சென்று, காரைக்கால் மீனவர் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.