நாட்டில் வெவ்வேறு இடங்களில் அம்மா - மகள் உட்பட ஐவருக்கு நேர்ந்த கதி - தீவிரப்படுத்தப்படும் பொலிஸ் விசாரணை
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று(30) இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில் 22 வயது இளைஞர் ஒருவர் உட்பட ஐந்து பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கம்பஹா, கலிகமுவ, மஹியங்கனை, மீரிகம மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துக்கள் குறித்த விரிவான விவரங்கள் வருமாறு,
வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிவேரிய - தெல்கொட வீதியின் வெலிவேரிய நகர்ப் பகுதியில் தெல்கொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இதன்போது, எதிர்பாராத விதமாக எதிர்த்திசையிலிருந்து வந்த கப் ரக வாகனத்துடனும் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹேனேகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய கப் வாகனத்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
70 வயது பாதசாரி விபத்தில் உயிரிழப்பு
இதேவேளை, பின்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலிகமுவ - அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதியில் மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
கலிகமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற வயோதிபப் பாதசாரி மீது மிக வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி உடனடியாகத் தொரணகஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அருகம்மன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் எனத் தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்மா - மகளுக்கு நேர்ந்த கதி
அதே போன்று, மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்பொத - இகிரியகொட கிளை வீதியின் இகிரியகொட பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கெசல்பொத நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிர்த்திசையிலிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அதிவேகமாக நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஒரு மோட்டார் சைக்கிளின் சாரதி, மற்றைய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பெண் மற்றும் அவரது மகள் ஆகிய மூவரும் உடனடியாக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சாரதியான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாபாகடவெவ - மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணிக்கு நேர்ந்த துயரம்
இதேவேளை, மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஉல்ல - பஸ்யால வீதியின் டி.எஸ். சந்திக்கு அருகில், பஸ்யால நோக்கிப் பயணித்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியின் ஒரு பக்கமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த முச்சக்கர வண்டியின், சாரதிக்கு அதனை வேகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதால், நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் முச்சக்கரவண்டி பலமாக மோதி நசுங்கியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதன் பின் ஆசனத்தில் பயணித்த நபர் ஆகிய இருவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின் ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பஸ்யால பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
லொறி சாரதி அதிரடிக் கைது
அத்துடன், படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பிட்டிய - அம்பலாங்கொடை வீதியின் கதகந்தகொட சந்திக்கு அருகில் லொறி ஒன்று வீதியோரமாக நடந்து சென்ற பாதசாரி மீது அநாவசியமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி எல்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹிரண, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்று தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஐந்து விபத்துச் சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.