விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி: தலவாக்கலையில் சம்பவம்
தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தலவாக்கலை - கொத்மலை வீதியில் இன்று(15) இடம்பெற்றுள்ளது என தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் லிந்துலை மெராயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராஜ் செல்லத்துரை (வயது 46) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து
இந்த விபத்து தலவாக்கலை சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திலிருந்து பூண்டுலோயா நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் பத்தனைப் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுமே தலவாக்கலை சுற்றுவட்டத்திற்கு முன்பாக நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் விசாரணைகளின் பின்னர் நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



