பொலிஸ் எச்சரிக்கையை மீறி சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - வெளியான சிசிடிவி காணொளி
லுனுகம்வெஹேர பகுதியிலிருந்து தனமல்வில நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள், லொறியொன்றை முந்தி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் விபத்திற்கு இலக்காகியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் 19 வயதான திஸ்ஸமஹராம - உடமத்தள பகுதியை சேர்ந்த எஸ்.ஆர்.லக்ருவான் மற்றும் நவீன் லக்ஷித ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் லுனுகம்வெஹேர பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் போக்குவரத்துக்கு பொலிஸார் குறித்த இளைஞர்களை பின் தொடர்ந்துள்ள நிலையில் கித்துல்கொட நோக்கி சுமார் 15 கிலோமீற்றர் தூரம் சென்ற பின் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை உயிரிழந்த இளைஞர்களிடம் சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள் செலுத்துவதற்கான எந்த ஆவணமும் இருக்கவில்லையெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வான் மற்றும் லொறி என்பவற்றின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் மோட்டார்சைக்கிள் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்காக லுனுகம்வெஹேர நகருக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் குறித்த விபத்துச் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ள நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.