நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவை
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி தொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்து கொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நடமாடும் சேவையில் கலந்து கொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு,
1. நீதியமைச்சின் தொழிலாளர் தீர்ப்பாயம், சமாதான நீதவான், தீடீர்மரண விசாரணை, சத்தியப்பிரமாணத்திற்கான ஆணையாளர், அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள் - தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகள்
2. காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் - காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்.
3. சட்ட உதவி ஆணைக்குழு - நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல், ஏதேனும் வழக்கு ஒன்றைத் தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையினை பெற்றுக்கொள்ளல்.
4. இழப்பீட்டுக்கான அலுவலகம் - புணர்வாழ்வு அதிகார சபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட பொதுமக்கள் சொத்திழப்பு, இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோவைகள் அரசாங்க ஊழியர் சொத்திழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரினால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளாதவர்களும் மேலதிகமாக இவ் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியும், சுயதொழில் திட்டப் பயிற்சி நெறிகள் தொடர்பான விபரங்களை இந்நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.
5. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் - இந்நிறுவனத்தினால் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
6. குற்றம் மற்றும் சாட்சியங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான அதிகார சபை - குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய அவர்கள் தமது பிரச்சினைகளை இவ்விடத்தில் முன்வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது, இத்திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
7. ஆட்பதிவுத்திணைக்களம் - புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும், ஏற்கனவே பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளமுடியும், அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அதுதொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
8. பதிவாளர் நாயகம் திணைக்களம் - காலம் கடந்த பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து சேவைகளைப் பெற்றுக்கொள்வதுடன் இது தொடர்பான மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
9. சமூக சீர்திருத்த அலுவலகம் - சமுதாய சீர்திருத்தத் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
10. மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் - அரச காணிகள் தொடர்பில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் தொடர்பிலான சேவைகளைப் பெற்றுக்கொள்ளல், அரச காணி தொடர்பில் ஏதேனும் பிணக்குகள் காணப்படின் அதுதொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்.
11. மத்தியஸ்தர் சபை - மத்தியஸ்தர் சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளல். (துண்டுப்பிரசுரம் மற்றும் காணொளி கண்காட்சி), ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கமுடியும், ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.
12. சிறைச்சாலைத்திணைக்களம் - சிறைச்சாலை கைதிகள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம், சிறைச்சாலை அலுவலர்களுக்கான தொழில் தகைமை தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளல், கைதிகளை நிகழ் நிலையில் பார்வையிடுவதற்கான அறிமுகம்.
13. சிறு தொழில் முயற்சி அபிவருத்திப்பிரிவு - சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறும்.
14. தொழில் பயிற்சி அதிகார சபை - தொழிற்பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறும்.