மலையகத் தமிழர் என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வதே பொருத்தமானது: மனோ எம்.பி
இந்தியத் தமிழரா, மலையகத் தமிழரா என்ற விவாதத்தை இப்போது ஒத்திவைத்து விட்டு, இம்முறை சனத்தொகை கணக்கெடுப்புக்கு இந்தியத் தமிழர் அல்லது மலையகத் தமிழர் என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானதாக எண்ணுகின்றேன் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குடிசனக் கணக்கெடுப்பில் மலையகத் தமிழ் அடையாளத்துக்கான கூட்டிணைவு அமைப்பினர், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனைச் சந்தித்து தமது கோரிக்கை ஆவணங்களை வழங்கி உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொது தமிழ் இன அடையாளம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சனத்தொகை கணக்கெடுப்பின் போது, காலம் ஒரு அடையாளத்தை காட்டும். “தமிழர்” என்ற பொது தமிழ் இன அடையாளமாக இருக்கலாம். அல்லது இன அடையாளங்களே மறைந்து “இலங்கையர்” என்ற பொது நாட்டு அடையாளமாகவும் இருக்கலாம்.
"நேற்று என்னைச் சந்தித்த, மலையக சிவில் அமைப்பினருடன் இது தொடர்பில் காத்திரமான கலந்துரையாடல் நடைபெற்றது. சிவில் சமூக நண்பர்களின் முன்னெடுப்பு ஒரு சமநிலைப்பாட்டை அடைந்துள்ளது பற்றிய எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.
இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் மற்றும் அனைத்து தமிழ் பேசும் மக்கள், இலங்கை மக்கள் மத்தியிலும் பிளவுகளை ஏற்படுத்த முடியாது. இது இலங்கை நாட்டவர் என்ற அடையாளத்திற்கு உள்ளே வரும் ஒரு சட்டபூர்வமான உள்ளக அடையாளம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
உத்தேச கணக்கெடுப்பு
தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களம் இது தொடர்பில் எடுத்துள்ள முற்போக்கு நிலைபாட்டை கணக்கில் எடுத்து, உத்தேச கணக்கெடுப்பு ஆவணங்களில் உரிய அடையாளம் இடம்பெறுவதற்கான உரிய அறிவுறுத்தல்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து கிடைக்கப்பட்ட வேண்டும் என என்னுடன் தொலைபேசியில் உரையாடிய தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், எமது கலந்துரையாடலின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது நிலைபாட்டைத் தெரிவித்திருந்தேன். இதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை, தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்துக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
இதை ஒருங்கிணைத்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயகவிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |