மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துக..! வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று(01.03.2026) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டாளர்கள் விரக்தியடைந்து
வடக்கு மாகாணத்தை நோக்கிப் பல முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். ஆனால், அவர்கள் தமக்கான முதலீட்டு அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் இன்றும் பல அதிகாரத்துவச் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்கும் செயன்முறையை நாம் விரைவுபடுத்தாவிட்டால், முதலீட்டாளர்கள் விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலையே ஏற்படும்.

எனவே, இந்த அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் சுற்றாடல் அமைச்சின் கீழான நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாமதங்கள் மற்றும் தடைகள் இயலுமானவரை விரைவாகக் களையப்பட வேண்டும், என வலியுறுத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இதற்குத் தீர்வுகாணும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்தச் செயன்முறைகளை மேலும் துரிதப்படுத்தி, மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஓராண்டுக்கு மேலாக இழுபறி
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், எமது மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, இந்தச் சட்டவரைவு திருத்தம் தொடர்பான உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை அனைவரும் முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

எமது மாகாணத்துக்கு வரவேண்டிய 100 மில்லியன் ரூபா பெறுமதியான மிகப்பெரிய முதலீடொன்று, சுற்றாடல் அனுமதி கிடைக்காமை காரணமாக ஓராண்டுக்கு மேலாக இழுபறியில் இருக்கின்றது.
இவ்வாறான நிலைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கை: லெபனானிலிருந்து அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள் - ஆரம்பித்துள்ள தாக்குதல்






