சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தினை வலியுறுத்தும் ஆதி ஐயனார் ஆலயம்!
ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராகச் சர்வதேச பாதுகாப்பு நெறிமுறையொன்றின் அவசியத்தினை ஆதி ஐயனார் ஆலய சூலம் அழிக்கப்பட்ட சம்பவம் மீளவும் வெளிப்படுத்தியுள்ளது என நாடுகடத்தத் தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களால் தொன்றுதொட்டு வழிபட்டு வரப்பட்ட முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு, அங்கு பௌத்த விகாரையின் சிதைவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் இலங்கையின் தொல்லியல் துறை அப்பகுதியினை அபகரித்துள்ளமையானது தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனவழிப்பாக (Culturalgenocide) காணப்படுகின்றது என நாடுகடத்தத் தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசு தனது அரசாங்க திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பெயர்களிலும், தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்துக் கொள்வதும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதும் மட்டுமல்லாது, தமிழ்மக்களின் பண்பாட்டு அடையாளங்கள் மீதான பண்பாட்டு இனவழிப்பினையும் (Cultural genocide) தொடர்ந்து தனது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாகச் செய்து வருகின்றது.
தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் தமிழர் தேசத்தின் மீதான சிங்களமயமாக்கல், பௌத்த மயமாக்கலை சிங்கள பேரினவாத அரசு தீவிரப்படுத்தியுள்ள இவ்வேளையில் தமிழர் தேசத்தில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றின் அவசியத்தினை மீள நாம் வலியுறுத்துகின்றோம் நாடுகடத்தத் தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.