ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ள ஆறாம் நிலம்
ஐபிசி தமிழின் தயாரிப்பில், ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படம் ஆறாம் நிலம் நேரடியாக ஐபிசி தமிழ் யூடியூப் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் ஆறாம் நிலம் வெளிப்படுத்தியுள்ளது.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை சொல்லப் படாத ஒரு கதைக் களம் இதில் பேசப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமெனவும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டுமெனவும் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆறாம் நிலம், ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் இன்றைய அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர்களின் உறவுப்பாலமான ஐபிசி தமிழ், ஈழத்தமிழர்களின் மாறாத வடுக்களையும், போருக்கு பின்னரும் மாறாத அவர்கள் வாழ்வியலையும் "ஆறாம் நிலம்" எனும் திரைப்படமாக வெளியிட்டிருப்பதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.