இலங்கையின் செயற்பாடுகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் கவலை!
இலங்கையில் இடம்பெறும் துயரமான செயற்பாடுகள் குறித்து திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் கவலை வெளியிட்டுள்ளதாக கர்தினல் மெல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் திருத்தந்தை பிரான்சிஸ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனக் கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தைக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த கடிதத்திற்கு திருத்தந்தை தனது சொந்த கையெழுத்தில் பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார் என கர்தினால் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி முன்னெடுக்கப்படும் சகல போராட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் துயர் மிகு சம்பவங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்காக அடிக்கடி கடவுளிடம் வேண்டிக் கொள்வதாகவும் பாப்பாண்டவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.