நாடளாவிய ரீதியில் பதிவான விபத்து சம்பவங்கள் (Photos)
நாடளாவிய ரீதியில் பல விபத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் பல உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு
நீர்கொழும்பில் ஹயஸ் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் காரின் சாரதியான 49 வயதுடைய குடும்பஸ்தரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த 28 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஹயஸ் வாகனத்தின் சாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடுகன்னாவ - ஹெனாவல
இதேவேளை, கடுகன்னாவ - ஹெனாவல பகுதியில் மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்த 44 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான குடும்பஸ்தர் ஹெனாவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தெனியாய
தெனியாய பிரதேசத்தில் குறுக்கு வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ
மொரட்டுவையில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த நண்பர்களான 24, 26 வயதுடைய இளைஞர்களே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம்
புத்தளத்தில் இருந்து சீதுவ நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று மாரவில பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான 34 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். அத்துடன் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதியின் மனைவி மற்றும் 4, 7 வயதுடைய இரு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணும் வயோதிப தாயாரும் இன்று ( 03.04.23) உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் அளம்பில் பகுதியில் வைத்து உந்துருளியின் வேக கட்டுப்பாட்டினை இழந்தநிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் 42வயதுடைய சறீதர் ஜெனிற்ற என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
குறித்த உந்துருளியில் பயணித்த மற்றையவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: ராகேஷ்

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 2 மணி நேரம் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
