முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக அரசங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவால் இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதியளித்தபடி, தேவையற்ற செலவுகளை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
முன்னாள் அரச தலைவர்களுக்கான ஓய்வூதியம்
இந்த முயற்சியின் ஓர் அங்கமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அரச தலைவர்களின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஒரு குழுவை ஜனாதிபதி அண்மையில் நியமித்தார்.
எவ்வாறாயினும், முன்னாள் அரச தலைவர்களுக்கான ஓய்வூதியம் போன்ற சில சலுகைகளை அரசியலமைப்பு திருத்தம் இல்லாமல் குறைக்கவோ அல்லது அகற்றவோ முடியாது என்று குழு கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் பிரிவு 36 (2) பிரகாரம் “ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டவுடன், அத்தகைய பதவியை வகிப்பவர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கும், அதன் பிறகு, நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கும் தகுதியுடையவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடகை இல்லாது பொருத்தமான வீடுகள்
இந்த சரத்துக்களின் எந்தவொரு திருத்தம், இரத்து அல்லது மாற்றுதல் மற்றும் இந்த சரத்துக்களுக்கு முரணான எந்தவொரு சட்டமும் அல்லது அதன் விதிகளும் பின்னோக்கிச் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னோக்கிச் செயல்படும் வகையில் ஒரு சட்டத்தை இயற்றுவது அரசாங்கத்திற்கு சவால் மிக்கதாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வாடகை இல்லாமல் பொருத்தமான வீடுகள் வழங்கப்பட வேண்டும் என அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய வீட்டின் வாடகை பெறுமதி அரசாங்க மதிப்பீட்டின்படி 4.6 மில்லியன் ரூபா என அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்தை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்கள் தொடர்பில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
