வவுனியாவில் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 108 வயதுடைய வயோதிபர்
வவுனியா - நெடுங்கேணி பகுதியில் வயோதிப தந்தையொருவருக்கு இன்றைய தினம் நடமாடும் மருத்துவ சேவையினரால் முதலாவது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசியினை பெற்று வருகின்றனர். சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் 108 வயது நிரம்பிய ஒரு முதியவர் தடுப்பூசி போட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.
அந்தவகையில், நெடுங்கேணி, சன்னாசிபரந்தன் கிராமத்தில் வசிக்கும் 108 வயது நிரம்பிய தந்தை ஒருவர் கோவிட் தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள விரும்புவதாக கூறியதற்கிணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் நடமாடும் தடுப்பூசி சேவையின் மூலம் முதலாவது தடுப்பூசி இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த வயதிலும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வுடைய ஒருவரிற்கு அவரது இல்லத்தில் வைத்து அவரது குடும்பத்தினரதும், அவரதும் வேண்டுகோளிற்கிணங்க தடுப்பூசி வழங்கியமையிட்டு பெருமைக்கொள்வதாக வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் 100 வயதுடைய அன்னை ஒருவருக்கும் இம்மாதம் (11) ஆம் திகதி முதலாவது தடுப்பூசி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.