முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற்றும் வெளிச்சம் பாய்ச்சி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட12 மீனவர்கள் 9 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (28) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாகச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கடல் தொழிலாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது நாயாறு பகுதியைச் சேர்ந்த 3 படகுகளும், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு படகும், கொக்குளாய் பகுதியைச் சேர்ந்த ஐந்து படகுகளிலுமாக, 12 தொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 12 பேரும் மற்றும் படகுகளும் இன்று மாவட்ட நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 12 பேரையும் ஆட்பிணையில்
நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.