இலங்கையில் எரிவாயுவின் விலை 85 வீதமாக அதிகரிப்பு:பிரித்தானிய வானொலி
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலை 85 வீதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் கொழும்பு நுகர்வோர் சுட்டெண்ணுக்கு அமைய உணவு பொருட்களின் விலைகளும் 20 வீதத்தில் அதிகரித்துள்ளது.
உலக உணவு மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள் குறித்து பிரித்தானியா வானொலி அண்மையில் மேற்கொண்டு ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆபிரிக்க நாடுகள், துருக்கி, பிரேசில், இலங்கை உட்பட பொருட்களின் விலை அதிகரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள் ஆய்வு உட்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் தெற்று நோய் காரணமாக சுற்றுலாத் தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளமை உட்பட பல காரணங்களால், இலங்கையில் தற்போது, அரிசி, கோதுமை மா, பால் மா ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் அவற்றின் தட்டுப்பாடுகள் மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
இதன் காரணமாக அதிகரித்து வரும் மக்கள் அதிருப்தியை அடக்க இலங்கை அரசாங்கம் 100 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரண பொதியை மக்களுக்கு வழங்கியதாகவும் பிரித்தானிய வானொலியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.