840 தமிழர்களுக்கு சுவிஸில் அரசியல் தஞ்சம் என்கிறது சிங்கள பத்திரிகை
இலங்கையின் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 57 ஊடகவியலாளர்கள் உட்பட 840 தமிழர்களுக்கு சுவிஸர்லாந்து அரசியல் தஞ்சம் வழங்கி உள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும், மூன்று அரசியல்வாதிகளும் இவர்கள் அரசியல் தஞ்சம் பெறுவதற்கான பரிந்துரைகளை செய்துள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகம், இவர்கள் சுவிஸ் செல்வதற்கான விசா அனுமதிகளை வழங்கியுள்ளதுடன் அது பற்றிய தகவல்களை இலங்கை அரசுக்கு மறைத்துள்ளது.
இதனை தவிர வடக்கின் ஊடகவியலாளர்கள் எனக் கூறப்படும் 6 பேர் பிரித்தானியா சென்று அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பிரதான தமிழ் அரசியல்வாதி ஒருவர், இவர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக லண்டனில் உள்ள சிங்கள சட்டத்தரணி ஒருவர் கூறியதாகவும் அந்த சிங்கள பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தை சேர்ந்த இந்த ஊடகவியலாளர்கள் படையினர் தம்மை தாக்கியதாக பொய்யான தகவல்களை முன்வைத்தே அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.
குறித்த சிங்கள பத்திரிகை இவ்வாறு கூறியுள்ள போதிலும் ஒரு வாரத்திற்கு முன்னர் கூட வடக்கில் இராணுவத்தினரால் தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருந்ததுடன் அந்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |