நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வுகள்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்கதலில் உயிரிழந்தவர்களின் 7-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று (21) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.
இன்று காலை 9.05 மணியளவில் சீயோன் தேவாலய முன்றலில் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கண்ணீர் மல்க மலர் அஞ்சலி செலுத்தி, சுடரேற்றி உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள நினைவுத் தூபியில், முன்னாள் மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலதிக தகவல்- ருசாத்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
மட்டக்களப்பு அரசடி கல்லடி பாலத்து அருகில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்கள் மதத் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கவன ஈர்ப்பு போராட்டம்
குண்டு தாக்குதலில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவுகள் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்,குற்றவாளியை பொறுப்புகூறுவதற்கு வழியேற்படுத்து,ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புமிக்க வெளிப்படைத்தன்மையான விசாரணைவேண்டும் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான நினைவஞ்சலி இடம்பெற்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
இலங்கை தமிழரசுக்கட்சி
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை வேறு விதத்தில் திசை திருப்பியிருந்தார்கள். குற்றவாளிகளை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் கூட நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூட விடுதலை செய்யப்படுகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது. ஆனால் இப்போது விசாரணைகளில் சில நம்பிக்கைகள் பிறந்திருப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
இந்த ஆட்சி காலத்தில் ஒரு வெளிச்சம் தெரிவது போன்று தெரிகின்றது. அதாவது இரண்டாம் மட்ட குற்றவாளிகள், மூன்றாம் மட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதாவது ஒரு தேவைக்காக, ஒரு ஆட்சி மாற்றத்திற்காக நடாத்தப்பட்ட ஒரு குண்டுத் தாக்குதலாக இது கொள்ளப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளினால் ஏற்பாடுசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள சேமக்காலையில் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை மனோருபன் அவர்களினால் விசேட பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டதுடன் புனித நீரும் தெளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளினால் தமது உறவுகளில் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவு தின நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன்,டாக்டர் இளையதம்பி சிறிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம்
2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இன்று பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உள்ள ஆயர் இல்ல சிற்றாலய மூன்றலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு வழிபாடும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளளை டேவிட் அவர்களால் அஞ்சலி உரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இறைமக்களென பலரும் கலந்து இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.

மேலதிக தகவல்- தீபன்
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri