மட்டக்களப்பில் கஞ்சா கசிப்பு வியாபாரி கைது 70 லீற்றர் கோடா மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பிரபல கஞ்சா, கசிப்பு வியாபாரியைக் கைது செய்துள்ளதுடன், 70 லீற்றர் கோடாவை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அவசர சேவை 119 இலக்கத்துக்குப் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பவதினமான நேற்று மாலை போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ்சாஜன் ரி. கிருபாகரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்ட போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 42 வயதுடைய பிரபல கஞ்சா மற்றும் கசிப்பு வியாபாரியைக் கைது செய்ததுடன், 70 லீற்றர் கோடாவை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.