அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு வழக்கு: முக்கிய ஆதாரம் சிக்கியதால் சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவு
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை இன்று(12.03.2026) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னிலையாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன் வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான முதுநிலை சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் தனது சமர்ப்பணத்தில், "இந்தக் கொலை தொடர்பான புலன் விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை.
மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தாக்கல் செய்த அறிக்கையிலேயே, இச்சம்பவம் ‘தற்காப்புக்காக’ செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு முடிவை முன்பே தீர்மானித்துவிட்டு விசாரணை நடத்துபவர்களிடம் ஆதாரங்களைத் தேடும் நம்பிக்கையை வைக்க முடியாது" என வாதிட்டார்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சல்மான் மற்றும் மாரசிங்க ஆகிய இரு காவல்துறை உத்தியோகத்தர்களையும் இதுவரை சந்தேகநபர்களாகக் கூட கைது செய்யாமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். மற்றொரு சட்டத்தரணியான அருள் அருஸ் வாதாடுகையில், சிறுவன் மீது பாய்ந்த தோட்டா இதுவரை கண்டுபிடிக்கப்படாமை மற்றும் வாகனம் நிறுத்தப்பட்ட விதம் ஆகியவற்றில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்தார்.
வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியைத் துளைத்துச் சென்ற தோட்டா எங்கே வெளியேறியது என்பதைக்கூட பொலிஸார் இதுவரை அடையாளப்படுத்தவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
விசாரணையின் போது, சம்பவ இடத்திலிருந்து தற்போது ஒரு துப்பாக்கி ரவையின் வெற்றுக் கோது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று தடயவியல்பொலிஸாரால் கண்டெடுக்கப்படாத ஒரு பொருள், இத்தனை நாட்களுக்குப் பிறகு மீட்கப்படுவதாகக் கூறுவது ஜோடிக்கப்பட்ட ஆதாரமாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வெற்றுக்கோது ஒன்று மீட்பு
இதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri