சுரேஷ் சலே மீது 3 பாரிய குற்றச்சாட்டுகள்: நீதிமன்றில் சி.ஐ.டி. 25 பக்க அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான 25 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை நேற்று(11.03.2026) கோட்டை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ள பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு,
1. விசாரணைகளை தவறாக வழிநடத்தியமை
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டுத் தவறாக வழிநடத்தியதாக சுரேஷ் சலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபராகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2. தீவிரவாதிகளுக்கு தகவல் வழங்கியமை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முன்னர், கட்டுவாபிட்டிய தேவாலயத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடையாளம் காட்டிக் கொடுப்பதற்காகப் புலனாய்வுத் தகவல் வழங்குநர் ஒருவரை சுரேஷ் சலே பயன்படுத்தியதாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
3. மரபணுப் பரிசோதனையில் அழுத்தம் கொடுத்தமை
சாய்ந்தமருது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, 'சாரா ஜஸ்மின்' மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டு மரபணுப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், மூன்றாவது பரிசோதனையை முன்னெடுக்குமாறு புலனாய்வாளர்களுக்கு சுரேஷ் சலே தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்ததாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்தரணியின் வாதம்
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முற்றாக நிராகரித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை என்றும், அவர் மலேசியாவில் இராஜதந்திரப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவர் வாதிட்டார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார, இது தொடர்பான மேலதிக அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள் - மறுப்பு தெரிவித்துள்ள ஈரான்! மும்பை வந்தடைந்துள்ள மற்றுமொரு கப்பல்
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri