மலேசியாவில் இலங்கை நபர் வலையில் சிக்கிய பெண்..! 7 இலங்கையர்கள் அதிரடி கைது
மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழிலாளராக சுரண்டியதாக சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் ஒருவரை மலேசிய குடிவரவு திணைக்களம் கைது செய்துள்ளது.
பொதுமக்கள் அளித்த முறைப்பாடு மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் கைது
இலங்கைப் பெண் ஒருவர் தனது முதலாளியால் தொழிலாளர் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய இலங்கை நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 21 முதல் 51 வயதுக்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
மலேசிய குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டத்துக் சகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 இலங்கையர்கள்
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வேலைவாய்ப்பு மற்றும் வேலை அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் குறித்த பெண் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், அந்தப் பெண் எந்தவித சம்பளமும் வழங்கப்படாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதுடன், போதுமான உணவும் வழங்கப்படவில்லை.
அவரது சுதந்திரமான நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்காக உடல் ரீதியான வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மலேசியப் பிரஜையை திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால சமூக வருகை அனுமதிப்பத்திரம் (Long-Term Social Visit Pass) பெற்றுள்ள சந்தேகநபர், மனிதக் கடத்தல் மற்றும் குடியேறியவர்களை கடத்தல் தடுப்பு சட்டம் (ATIPSOM) பிரிவு 12 மற்றும் 1959/63 குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என மலேசிய குடிவரவு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.