20 வருடங்களாக சாக்கடை நீரை அருந்தி வரும் 600 மலையக குடும்பங்கள்!
ஹட்டனிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரொத்தஸ் கொலனியில் வாழும் சுமார் 600 குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக சாக்கடை நீரை அருந்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த குடிநீரை நாளாந்தம் அருந்துவதன் காரணமாகப் பலர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வயோதிபங்கள் சிறுவர்கள் அடிக்கடி வயிற்று வலி, வாந்தி மற்றும் ஏனைய நோய்கள் காரணமாகவும் மருந்து எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பிரதேசத்திற்குச் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்காததன் காரணமாக, இங்கு வாழும் மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தும் நீரினை குடிப்பதற்கும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.
குடிப்பதற்கு உகந்ததில்லை
இந்த நீரில் ஹட்டன் - ஆரியகம மற்றும் ஆஞ்சநேயர் ஆலய பகுதியில் வசிக்கும் மக்களால் பயன்படுத்தப்பட்டு விடுவிக்கப்படும் கழிவு நீர் குறித்த நீரில் கலப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த குடிநீர் விடயம் குறித்துப் பல தடவைகள் மலையக அரசியல் தலைவர்கள் முதல் நாட்டின் ஜனாதிபதி பிரதமர் வரை தெளிவுபடுத்தப்பட்டபோதிலும், இது வரை எந்த வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
தேர்தல் காலங்களில் மட்டும் இந்த விடயத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிவித்து வாக்குகளைப் பெற்றுச் செல்வதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா? என்று பிரதேச செயலகத்தில் சோதனை செய்து பார்த்தபோது, குடிப்பதற்கு உகந்ததில்லை எனச் சுகாதார பிரிவினர் தெரிவித்ததாகவும் வேறு வழியின்றி இந்த நீரினை குடித்து வருவதாகவும் பலர் கூறியுள்ளனர்.
நீர்ப் பாசன அமைச்சர் ஜீவன் தொண்டமான்
ரொத்தஸ் கொலனிக்கு குடிநீரினை பெற்றுக்கொள்வதற்காக நீர் வழங்கல் வடிகால் சபையிடம் சென்று பேசிய போது அதற்குக் கோடிக்கணக்கில் செலவிட வேண்டி வருவதாகத் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரதேசத்தின் குடிநீர் விடயம் தொடர்பில் தற்போது உள்ள நீர்ப் பாசன அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன், அதிகப் பணம் செலவிடா விட்டாலும் இருக்கும் நீரினை சுத்தப்படுத்திப் பெற்றுக்கொடுத்தாலே போதுமானதாக இருக்கும் என இன்னும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
எது எவ்வாறான போதிலும், நீர் வளம் நிறைந்த மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் இன்றி கஷ்ட்டப்படுவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயம் என ஒருவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
You may like this Video

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
