மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலி
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊறணி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகிய தரம் இரண்டில் கல்வி கற்கும் ஆறு வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவர்கள் வாழ்ந்து வந்த வீடு உடைக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரிகள் இவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள உறவினரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.
இவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டில் மின் இணைப்பு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் குறித்த வீட்டிற்குள் சென்ற சிறுவன் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி விழுந்து கிடந்ததைக் கண்ட உறவினர்கள், அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள போதும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




