திருகோணமலையில் 545 கிலோமீட்டர் நீளமான வீதிகள் காப்பற் இடுவதற்கான வேலைகள் ஆரம்பம்
திருகோணமலை மாவட்டத்தில் 545 கிலோமீட்டர் நீளமான வீதிகள் காப்பற் இடுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக 13328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜ ரோட் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல ஆகியோர் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது வீதி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"சுபீட்ஷத்தின் நோக்கு கொள்கை" பிரகடனத்திற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் தற்போது 722 வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 755 மலசல கூட வசதிகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் நீர்ப்பாசன செழுமை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 43 குளங்கள் புனர் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இவற்றின் வேலைகள் நூற்றுக்கு 80 வீதமானவை பூர்த்தியடைந்துள்ளன.
ஏனைய மாவட்டங்களின் அடைவு மட்டங்களோடு ஒப்பிடும்போது எமது மாவட்டத்தின் நிலை சிறப்பாகக் காணப்படுவதாக இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் கிலோமீட்டர் நீளமான வீதிகளை காபட் வீதிகளாக மாற்றும் திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு 545 கிலோமீட்டர் நீளமான வீதிகள் காப்பற் இடுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக 13328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட செயலகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, உள்ளூர் அதிகார சபைகளின் தவிசாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.