முல்லைத்தீவில் படுகொலைச் செய்ய 53 மாணவர்கள் - 20 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த 58 பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது, பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் 20ஆ ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
20ஆவது வருட நினைவு தினம்
தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளர் சாம்பசிவம் உதயன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் அனுஷ்டிக்கப்படுவதுடன், தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழக்கமாக உள்ளது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், அரசியல் பிரமுகர்கள், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

